Wednesday 24 August 2016

நொண்டிக் குதிரைக்குச் சறுக்கியதே சாக்கு !

அல்லாஹ்வின் திருப்பெயரால்...






‘எவர் தொழுகையை தொழுது, நம் முன்னோக்கும் கிப்லாவை முன்னோக்கி, நாம் அறுக்கும் பிராணியின் இறைச்சியைப் புசிக்கின்றாரோ, அவர் அல்லாஹ், ரசூல் உடைய பாதுகாப்பிலுள்ளவராவார். அல்லாஹ்வுடைய பாதுகாப்பில் நீங்கள் எவரும் தலையிட வேண்டாம்.’                    - அல்ஹதீஸ்

 இஸ்லாமிய சமுதாயத்தில் பலர் பொய், புரட்டு, வஞ்சகம் போன்ற அற்பச் செயல்களில் ஈடுபடுவதன் மூலம், தமது தலையில் இறைமுனிவை வாரிக் கொள்கின்றனர். தமக்கிடையேதான் இப்படிப்பட்ட தகாத செயல்களில் ஈடுபடுகின்றனர் என்றால், படைத்த இறைவனுக்குப் பணிந்து அவனுக்கு கடமையாற்றுவதிலும் வரம்பு மீறிய மெத்தனத்தில் வாழ்ந்து வருகின்றனர்.


ஹஜ் கடமையான ஒருவரை நோக்கி இக்கடமையை சீக்கிரம் நிறைவேற்றுங்கள் எனக் கூறினால், ‘ஹஜ்ஜுச் சென்று வந்து விட்டால், மிக்க ஒழுங்காக வாழ வேண்டுமே, அதற்குப் பின்பும் தவறு புரிந்தால் சமுதாயம் எம்மைக் காறித் துப்புமே’ எனக் கூறி நழுவப் பார்க்கின்றார்.

அப்படியானால் நான் ஹஜ்ஜுக்குச் செல்லவும் மாட்டேன், ஒருக்காலமும் நான் திருந்தியும் வாழ மாட்டேன் என்பது இவர்களின் வாதமா? காலமெல்லாம் பாவ அழுக்காற்றில் புரண்டு அதே நிலையிலேயே மண்டையைப் போடுவேன் என்பது இவர்களின் பிடிவாதமா? ஒரு ஹாஜி மட்டும்தான் பாவங்களில் ஈடுபடக் கூடாது. மற்றவர்கள் என்ன வேண்டுமானாலும் செய்யலாம். எப்படி வேண்டுமானாலும் வாழலாம் என்பது இவர்களின் நினைப்பா…?

ஒரு ஹாஜியின் வாய், புறம் – கோள் பேசக் கூடாது. ஒரு ஹாஜி நீதி நேர்மையிலிருந்து பிறழக் கூடாது. இறைக் கடமையாற்றுவதில் இம்மியும் பிசகக் கூடாது என்பதெல்லாம் நூற்றுக்கு நூறு உண்மைதான்.

ஆயினும் ஒருவர் ஹஜ் செய்யாது அதனைக் கிடப்பில் போட்டுக் கொள்ள, இதனை ஒரு சாக்காகவே பயன்படுத்தி தப்பித்துக் கொள்ள நினைப்பதுதான் அநாகரீகச் செயலாகும். ‘ஒருவர் ஹஜ் கடமையை நிறைவேற்றவில்லையானால் அவர் யூதராகவோ, கிருத்துவராகவோ மரித்துப் போகட்டும்’ என நபி (ஸல்) அவர்கள் எச்சரித்துள்ளார்கள். இந்த இழிவு நிலைக்கு ஆளாகுவதைவிட ஒருவருக்கு வேறு துர்பாக்கியம் இருக்க முடியாது. நபிகளாரின் இந்த எச்சரிக்கை வீண் சாக்குகள் மூலம் ஹஜ்ஜை தள்ளிப்போடும் சீமான்களுக்கு சாதாரணமாகத் தெரிகிறதா?

தவிர, தாம் ஹஜ் செய்யாதவரை எப்படியும் வாழலாம் என்று கூறி அனைத்து உரிமைகளையும், சலுகைகளையும் இந்த விதாண்டாவாதிகளுக்கு இலவசமாக விநியோகித்தவர்கள் யார்? தாம் ஹஜ் செய்யாதிருக்க இப்படிப்பட்ட மோசடி வாதங்களையெல்லாம் முன்வைப்பது தவறல்லவா? ஹஜ் செய்யும் முன்பும், பின்பும் எல்லா முஸ்லிம்களும் உண்மை முஸ்லிம்களாக வாழ வேண்டுமென்பதே இஸ்லாத்தின் கட்டளையாகும்.

  ‘அல்லாஹ்வுக்காக நீங்கள் முறையாக அஞ்சுங்கள். நீங்கள் முஸ்லிம்களாகவன்றி (வாழ்ந்து) மறைய வேண்டாம்’ என்ற திருமறையின் வசனங்களெல்லாம் இக்கட்டளைகளையே எடுத்தியம்புகின்றன.

இவ்வுண்மையை உணர்ந்து இறையோனுக்குப் பயந்து இறைக் கட்டளைகளை நிறைவேற்றுவதில் சாக்குபோக்கு கூறுவதை தவிர்த்து திருந்தி வாழ அனைத்து முஸ்லிம்களும் முன் வர வேண்டும்.

No comments:

Post a Comment

welcome to your comment!