ஒரு ஆறுதல் வார்த்தை, ஒருவரின் மறுமை வாழ்வையே மாற்றக்கூடும்.
இமாம் இப்னுல் ஜவ்ஸி (ரஹிமஹுல்லாஹ்) அவர்கள் தனது வாழ்வில் நடந்த ஒரு விசித்திரமான, படிப்பினைமிக்க நிகழ்வை குறிப்பிடுகிறார்கள்:
ஒரு நாள் நான் மஸ்ஜிதில் ஓய்வெடுத்துக் கொண்டிருந்தேன். அப்போது ஒரு ஜனாஸா பள்ளிவாசலுக்குள் கொண்டு வரப்படும் சத்தம் கேட்டு விழித்தேன். அந்நேரம் என் மனதிற்குள், "இந்த ஜனாஸா தொழுகையில் நானும் பங்கெடுப்பேன்; இதன் மூலம் அல்லாஹ் எனக்கு நன்மைகளை வழங்கக்கூடும்" என்று எண்ணிக் கொண்டேன்.அந்த நபர் யாரென்று எனக்குத் தெரியாது, என் வாழ்நாளில் அவரை நான் பார்த்ததும் இல்லை. இருப்பினும், நன்மையை எதிர்பார்த்தும் அந்த நபர் மீது கொண்ட கருணையினாலும் நான் அந்த ஜனாஸா தொழுகையில் பங்கேற்றேன்.
தொழுகை முடிந்ததும், அந்த ஜனாஸாவை நல்லடக்கம் செய்யும் வரை அவர்களுடனேயே செல்ல விரும்பினேன். அடக்கஸ்தலம் வரை சென்று, அமைதியாக அடக்கப் பணிகளிலும் உதவி செய்தேன். மக்கள் அனைவரும் கலைந்து சென்ற பிறகு, அந்த மண்ணறைக்கு அருகில் நான் மட்டும் தனியாக நின்றேன்.
அங்கு அமர்ந்து, வானத்தின் பால் கைகளை ஏந்தி அல்லாஹ்விடம் இவ்வாறு பிரார்த்தித்தேன்:
"யா அல்லாஹ்! இவர் உன்னிடம் விருந்தினராக வந்திருக்கிறார். இவர் எனக்கு அறிமுகமில்லாதவர் தான். இருப்பினும், அறிமுகமில்லாத ஒரு விருந்தினர் எனது வீட்டிற்கு வந்தாலே நான் அவரை கண்ணியப்படுத்துவேன். அப்படியிருக்க, நீயோ கண்ணியப்படுத்துபவர்களில் எல்லாம் மிகச் சிறந்தவன் (அக்ரமுல் அக்ரமீன்). நீ இவரை எவ்வளவு சிறப்பாக கவனிப்பாய்? "
அந்தப் பிரார்த்தனைக்குப் பிறகு நான் மஸ்ஜிதிற்குத் திரும்பினேன். சிறிது நேரம் உறங்கியபோது ஒரு கனவு கண்டேன். அதில் வெண்ணிற ஆடை அணிந்த ஒரு மனிதரைக் கண்டேன். அவரது முகம் மிகவும் பிரகாசமாக இருந்தது. அவர் என்னை நெருங்கி வந்து, "நீங்களா எனக்காக அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய்தவர்?" என்று கேட்டார்.
நான் ஆச்சரியத்துடன், "நீங்கள் யார்?" என வினவினேன்.அதற்கு அவர், "யாருடைய ஜனாஸா தொழுகையில் நீங்கள் கலந்து கொண்டு, மண்ணறைக்கு அருகில் நின்று எனக்காகப் பிரார்த்தனை செய்தீர்களோ, அந்த நபர் நான் தான். அல்லாஹ்வின் மீது சத்தியமாக! உங்களது அந்தப் பிரார்த்தனையினால் அல்லாஹ் என்னை மன்னித்துவிட்டான்" என்று கூறினார்.
இமாம் இப்னுல் ஜவ்ஸி (ரஹ்) அவர்கள் மிகுந்த உணர்ச்சியுடன் விழித்தெழுந்தார்கள். நாம் அறியாத ஒருவருக்காக, தூய எண்ணத்துடன் செய்யப்படும் ஒரு சிறு பிரார்த்தனையையும் அல்லாஹ் ஏற்றுக் கொள்கிறான் என்பதை அன்று அவர் ஆழமாக உணர்ந்தார்.
படிப்பினைகள்
ஒருவர் இல்லாத இடத்தில் அவருக்காகச் செய்யப்படும் பிரார்த்தனைக்கு வானவர்கள் 'ஆமீன்' கூறுகிறார்கள். அது மிக விரைவில் அங்கீகரிக்கப்படுகிறது.
எவரையும் குறைத்து மதிப்பிடாதீர்கள். நீங்கள் காட்டும் ஒரு சிறு கருணை அல்லது சொல்லும் ஒரு ஆறுதல் வார்த்தை, ஒருவரின் மறுமை வாழ்வையே மாற்றக்கூடும்.
🖊️தமிழாக்கம் : இம்ரான் ( நூரி)

Comments
Post a Comment
welcome to your comment!